பெரும் சட்டச் சிக்கலில் நீதியமைச்சர்

நீதிமன்ற அவமதிப்புப் பேச்சு

பெரும் சட்டச் சிக்கலில் நீதியமைச்சர்

பெரும் சட்டச் சிக்கலில் நீதியமைச்சர் என்.பி.பி. அரசாங்கத்தின் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஒரு கருத்தினால் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுச் சட்டச் சிக்கலில் மாட்டக்கூடிய நிலையில் உள்ளார். கடந்த ஜூன் 2 ஆம் தேதி மொரட்டுவ நகர சபையின் முதலாவது உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றும்போது முன்னைய நகர சபை ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தொடர்ந்து பேசும்போது, "இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னான்டோ ஆகியோருக்கு அவ்வாறான கடுமையான தண்டனை விதித்த தீர்ப்பு அவ்வாறு கிடைத்திருக்குமா ? நிச்சயமாகக் கிடைத்திருக்க மாட்டாதென்றே தனிப்பட்ட ரீதியில் நான் நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

அதாவது, தற்போது நீதிமன்றம் இவ்வாறான கடுமையான தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கி இருப்பதற்குக் காரணம் தற்போதைய அரசாங்கம்தான் என்ற தொனியில் பேசியுள்ளார். அதாவது, இந்தத் தீர்ப்புக்குக் காரணம் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை அல்ல, மாறாக இந்த் அரசாங்கத்தின் அழுத்தம்தான் காரணம் என்கிறார். இந்தப் பேச்சின் மூலம் நீதித்துறையின் சுயாதீனம் சந்தேகத்துக்கு உள்ளாகிறது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் பேச்சாகும். குறித்த இருவர் மீதான வழக்கு 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்போக்கில் தொடரப்பட்டது. வழக்கானது மூன்று நிரந்தர நீதிபதிகள் கொண்ட விஷேட மேல்நீதிமன்றத்திலேயே கடந்த ஏழு வருடங்கள் விசாரிக்கப்பட்டுவந்த நிலையில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீரப்புக்கும் இந்த அரசாங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, இருக்கவும் கூடாது, இருக்கவும் முடியாது. அப்படியான அர்த்தம் தொனிக்கும் விதத்தில் பேசுவதே கடும் குற்றமாகும். அமைச்சரின் பேச்சுக் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமைச்சருக்கு எதிராகக் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் அதிகரித்தவண்ணம் உள்ளது.. என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.