ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இரண்டு மனுக்கள் தாக்கல்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இரண்டு மனுக்கள் தாக்கல்

ரணிலுக்கு எதிரான இரண்டு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கலால் சட்டத்தை மீறி புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை நிதியமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க வழங்கி நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக அறிவிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் குழுவினருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (03) தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26, 2024 முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற செப்டம்பர் 24, 2024 வரையிலான இரண்டு மாத காலப்பகுதியில் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு உச்ச நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மாத்தளை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான தங்கவேலு தனேந்திரராஜா உள்ளிட்ட குழுவினரே இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, முன்னாள் கலால் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி மற்றும் சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் நீதிமன்றில் சாட்சியங்களை சமர்ப்பித்ததுடன், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26ஆம் திகதி முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற செப்டெம்பர் 21ஆம் திகதி வரையில் பிரதிவாதிகள் சட்டத்தை மீறி புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் 19 வயது மகனுக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, அரசியல்வாதிகளின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கே இவ்வாறு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் இலாபம் அடையும் உள்நோக்கத்துடன் இந்த மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன, கால அவகாசம் நிறைவடைந்த பின்னரே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு உண்மைகளை மறைத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் சமர்பித்தார். இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்ட கலால் விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டு தற்போது புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, சம்பந்தப்பட்ட மனுக்களை விசாரிக்க அனுமதித்து, நவம்பர் 19-ம் தேதி மனுக்கள் மீதான விசாரணைக்கு தேதியை நிர்ணயம் செய்தது.